தனியாக டீ ஆற்றிய பிரதமர்
நம் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்நாட்டுக்கு வந்ததும் அது சம்மந்தமான செய்தி மற்றும் வீடியோக்களை பார்த்து இருப்பீர்கள். அப்படி பார்க்கவில்லை என்றால் மேலே இருக்கும் முக்கியமான வீடியோவை பார்க்கவும். தமிழகம் வந்த பிரதமரை முதல்வர் என்ற முறையில் செல்வி ஜெயலலிதா விமான நிலையம் சென்று வரவேற்கிறார். பின்னர் சம்பிரதாயப்படி சில அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அப்புறம் தன் அமைச்சரவை சகாக்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். அப்புறம் சம்பிரதாயப்படி மத்திய மந்திரிகள் சிலர் வந்து அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு அருகே நிற்கும் மாநில முதல்வருக்கும் மரியாதை செலுத்திவிட்டு செல்கிறார்கள். இதுவரை எல்லாம் நல்லா தான் போய்கிட்டு இருந்தது
அப்போது தான் திருப்புமுனையாக நுழைகிறார் ஒருவர். அவர் வேறு யாரும் அல்ல கடந்த ஆட்சியில் மதுரையை மாநகரத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்த அஞ்சாநெஞ்சன் அழகிரி தான். அவருடன் காங்கிரசின் செல்லப்பிள்ளையான தயாநிதி மாறனும் உடன் வருகிறார். பிரதமருக்கு மரியாதை செலுத்திய அழகிரி அருகே நின்று கொண்டு இருக்கும் ஜெயலலிதாவுக்கும் மரியாதை செலுத்துவார் என்பது தமிழ்நாட்டு அரசியலில் எதிர்பார்க்க முடியாதது தான். ஆனால் முல்லைப்பெரியாறு விவகாரம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இந்நேரத்தில் நாங்கள் கட்சி வேறுபாடு இன்றி ஒன்றுபட்டு நிற்போம் என்று அறிக்கைகளை பத்திரிக்கைகளில் வாசித்ததால் கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடித் தான் போய்விட்டது
முதல்வருக்கு மரியாதை செலுத்தாத மத்திய அமைச்சரோ சும்மா இருக்காமல் லேசாக ஒரு நக்கல் சிரிப்பை வேறு உதிர்த்துவிட்டு செல்கிறார். குசும்பு பிடித்த நக்கீரனோ இதை ஸ்லோமோஷனில் வேறு காட்டுகிறது. அண்ணனே மரியாதை செலுத்தாததால் அவரை பின் தொடர்ந்து அவரது தம்பிகளும் அவ்வாறே செய்கின்றனர். சும்மாவே ஆடும் நம் முதல்வர் அண்ணன் வந்து உடுக்கையை வேறு அடித்துவிட்டு சென்றுவிட்டதால் கடுப்பாகி அபவுட்டர்ன் போட்டு தன் காரில் ஏறி இடத்தை காலி செய்துவிட்டார். ஆளும் கட்சியும் இல்லாமல் எதிர்க்கட்சியும் இல்லாமல் நம் பிரதமர் தன் கட்சிக்காரர்களுடன் கொஞ்ச நேரம் தனியே செலவிடுகிறார்
இப்போது இந்த நிகழ்வுகளை எல்லாம் வெறும் அரசியல் நிகழ்வகவோ அல்லது நகைச்சுவையாகவோ பார்த்துவிட்டு வழக்கம் போல் நாம் கடந்து சென்றால் நம்மைவிட முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரளா மாநில முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் ஒன்றாக சென்று பிரதமரை சந்திக்கிறார்கள். ஆனால் நம் தமிழ்நாட்டிலோ பிரதமருக்கு முன்னிலையில் தங்கள் ஈகோவை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள். ஏற்கனவே சேட்டன்கள் லாபி முழு நேரம் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆங்கில ஊடகங்களில் நம்முடைய தரப்பு வாதத்தை முன்வைக்க ஒரு நாதி கூட இல்லை. நம் அரசியல் தலைவர்கள் இப்படி எல்லாம் நடந்து கொண்டால் நமக்கு தான் நட்டம்
0 comments:
Post a Comment