முல்லை பெரியாறு - சேட்டன்களின் சேட்டை
கேரளத்து சேட்டன்மார்கள் மீண்டும் தங்கள் சேட்டைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள். முல்லை பெரியாறு விவகாரம் மீண்டும் செய்திகளில் அடிபட துவங்கியதில் இருந்து கேரளத்து சேட்டன்மார்கள் சிலர் தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் உச்சகட்டமாக தமிழகத்தில் இருந்து ஆண்டு தோறும் சபரி மலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. பக்தர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை எந்த ஒரு இந்து அமைப்பும் இதுவரை கண்டிக்காதது மிகப் பெரிய வேடிக்கையாக இருக்கிறது. ஒரு பத்தாண்டுகளுக்கு முன் திருவனந்தபுரம் சென்ற போதே அங்கு பா.ஜ.க. கொடி தான் பறந்து கொண்டு இருந்தது. இப்போது நிச்சயம் அவர்கள் இன்னும் வலுவாகவே இருப்பார்கள். பக்தர்கள் என்றாலும் அவர்கள் தமிழர் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் எங்கே மலையாளி ஓட்டை இழக்க நேரிடுமோ என்று கணக்கு போட்டிருப்பார்கள் போல
இதே மாதிரி தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் எந்த ஒரு இந்து அமைப்பும் கூட இதை கண்டித்ததாக தெரியவில்லை. கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று போர் முரசு கொட்டிக் கொண்டு இருக்கும் இராமநாதபுர மாவட்ட பாரதீய ஜனதா கட்சிகள் கூட கண்டித்ததாக தெரியவில்லை. சேட்டன்மார்களுக்கு எப்போதும் தமிழன் என்றால் ஒரு இளப்பம் இருக்கும் போல. சந்திரமுகி படம் வெளிவந்து சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருந்த சமயம் உடன் பணிபுரியும் ஒரு சேட்டனிடம் இதுவரை தமிழில் வந்த படங்களிலேயே சந்திரமுகி தான் வசூலில் விஞ்சியிருக்கிறது என்று சொன்ன போது. அவர், ஓம், சந்திரமுகி படத்தின் ஒரிஜினல் மலையாள படமாக்கும். பின்னே எங்கனம் ஹிட்டாகாமல் போகும். அதுவும் நாங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே பார்த்து ரசித்த திரைப்படத்தை நீங்கள் எல்லோரும் இப்போது தான் பார்க்கிறீர்கள் என்று சொன்னார். இத்தனைக்கும் அவர் வீணே மலையாள ஜம்பம் பேசித் திரியும் ஆசாமி அல்ல
முல்லை பெரியாறு செய்திகள் அடிபட துவங்கிய முதல் நாளே இந்த பிரச்சினையில் ஏதோ உள்குத்து இருப்பதாகவே தோன்றியது. ஆனால் என்னவாக இருக்கும் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலையில் இருந்தது. அந்த உள்குத்து என்னவென்று அடுத்த சில நாட்களிலேயே செய்திகளின் மூலம் தெரிந்தது. கேரள முதல்வர் உம்மன் சாண்டி முல்லை பெரியாறு அணைக்கும் கூடங்குளம் அனு உலைக்கும் முடிச்சு போட்ட போது ஆகா இது தான் அந்த உள்குத்தா என்று விளங்கியது. முல்லை பெரியாறு அணை பிரச்சினை அவ்வப்போது தலைகாட்டினாலும் இப்போது மீண்டும் தலைதூக்கி இருப்பதற்கு காரணம், மத்தியிலும் கேரளத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி. அதிலும் இப்போது தமிழகத்தில் வேறு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தேர்தலுக்கு முன் காங்கிரசுக்கு நேசக்கரம் நீட்டிய ஜெயலலிதாவோ தேர்தலில் கிடைத்த அபரிதமான வெற்றிக்குப் பின்னர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதிற் கொண்டு பா.ஜ.க. பக்கம் தனது பார்வையை திருப்பி இருக்கிறார். குஜராத்தில் மோடியின் உண்ணாவிரத்தத்துக்கு ஆதரவளித்த ஜெயலலிதா மறவாமல் அத்வானியின் ரத யாத்திரைக்கும் ஆதரவளித்து இருக்கிறா. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் யார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு வசதியாக இருக்க வேண்டும் அல்லவா
தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட சமீபத்தில் மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருந்தார். அதற்கு வைக்கப்பட்ட செக் ஆகக் கூட இருக்கலாம். ஏற்கனவே 2Gயை வைத்து தி.மு.க.வை காங்கிரசு கட்டம் கட்டிவிட்டது. அடுத்து தன் பார்வையை அ.தி.மு.க. பக்கம் செலுத்தி இருக்கிறது. இதில் ஜெயலலிதா வெல்வாரா காங்கிரசிடம் தோற்றுவிடுவாரா என்று போகப் போகத் தான் தெரியும். இந்த விவகாரத்தால் ஒருவகையில் அவருக்கும் லாபம் தான். இப்போதெல்லாம் யாருமே அதிகரித்து வரும் மின்வெட்டு பற்றியோ, விலைவாசி பற்றியோ பேசக் காணோம். இது அவருக்கு எதிர்பாராத லாபம் தான், அவர் தான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலியாச்சே
1 comments:
nice and timing post.... thanks for sharing the information... please read my tamil kavithaigal in www.rishvan.com
Post a Comment