ஆதவன் - யூ டூ சூர்யா??
ஆதவன் படத்தை பார்த்து ஒருவர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்து இருப்பாரே ஆனால் அது நடிகர் விஜய்யாகத் தான் இருக்கும். போன வருடத்துக்கு முந்தைய வருடம் இதே மாதிரி தீபாவளிக்கு நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படம் வெளியானது. அதே தீபாவளிக்கு நடிகர் சூர்யா நடித்த வேல் படமும் வெளியானது. இரண்டு படங்களிலுமே நாயகர்களான விஜய்யும், சூர்யாவும் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தனர். அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பாத்திரமாகவும் மங்கி கேப் போட்டு மற்றொரு பாத்திரமாகவும் நடித்து இருந்தார். வேல் படத்தில் நடித்த சூர்யாவோ இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பி இருந்தார். இரட்டை வேடத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று விஜய்க்கே பாடம் எடுப்பது போல் இருந்தது வேல் படத்தில் சூர்யாவின் நடிப்பு. இத்தனைக்கும் விஜய் சூப்பர் ஹீரோவாக நிலைநாட்டிய பின் அவர் படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து இருந்தவர் நடிகர் சூர்யா
இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டும் தீபாவளிக்கு விஜய் நடித்த வேட்டைக்காரன் படமும் சூர்யா நடித்த ஆதவனும் வெளிவரும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. சூப்பர் ஸ்டார் நடித்த சந்திரமுகி படத்துடன் தில்லாக சச்சினை மோத விட்ட விஜய் அழகிய தமிழ் மகன் கொடுத்த பாடத்துக்கு பிறகு சூர்யாவின் ஆதவன் படத்துடன் மோதும் தில் இருந்திருந்தால் ஆச்சரியமே. ஏனோ காரணங்களால் வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளிவரவில்லை. ஒருவேளை வேட்டைக்காரன் வெளிவந்து இருந்தால் நான் கூட நிச்சயமாக ஆதவனை படத்துக்கு போகாமல் வேட்டைக்காரன் படத்தை தான் போய் பார்த்து இருப்பேன். விஜய்காக இல்லை, அனுஷ்காவுக்காக என்ன தான் சூர்யா படம் என்றாலும் ஹீரோயின் நயன்தாரா என்று தெரிந்ததுமே ஆதவன் படத்தை பார்க்கும் ஆர்வம் எனக்கு சுத்தமாக இல்லை. ஆனால் விதி வலியது
சூர்யாவின் ஆதவன் படத்துடன் எப்படி மோதுவது அப்படி மோதினால் கண்டிப்பாக படம் நன்றாக வரவேண்டும் என்ற கட்டாயம் விஜய்க்கு கண்டிப்பாக இருக்கும். ஆனால் இப்போது ஆதவன் படத்தை பார்த்துவிட்டு வேட்டைக்காரனை மோதவிடாமல் மிஸ் பண்ணிவிட்டோமே என்று விஜய் நினைத்து இருப்பார். விஜய் ஏற்கனவே நடித்து இதே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய மின்சாரக் கண்ணா படம் மாதிரி தான் இருக்கிறது ஆதவன் படமும். மின்சாரக் கண்ணா படத்தில் விஜய் காமெடி ஹீரோவாக செய்தது போல் தான் சூர்யாவும் செய்து இருக்கிறார். இதே படத்தை மட்டும் நம்ம விஜய் பண்ணி இருந்தால் நம் இணைய கண்மனிகள் படத்தை பிரித்து மேய்ந்து இருப்பார்கள் சூர்யா மேல் கொஞ்சம் நம்பிக்கை இருப்பதால் நம் ரசிகர்கள் பொறுமை காக்கிறார்கள். இந்த பொறுமையை சூர்யா தொடர்ந்து சோதிக்காமல் இருக்க வேண்டும்
வாரணம் ஆயிரம் படத்தில் மகனாகவும் தந்தையாகவும் சூர்யா முதியவர் வேடத்தில் புகுந்து விளையாடி இருப்பார். இந்த படத்தில் பத்து வயது சூர்யா வருகிறார் ஆனால் அதில் நம்ம சூர்யா நடிக்கவில்லை. அதற்கு பதிலாக மார்ஃபிங் பண்ணி இருக்கிறார்கள் இதை எல்லாம் இந்தியன் படத்திலேயே நாம பாத்தாச்சு. பிதாமகன் படத்தில் ஓடும் ரயிலில் சூர்யா ஏலம் விட்டு பொருட்களை விற்கும் போது கம்பெனிக்கு கட்டுப்படி ஆகவில்லை என்று கன்னட பைங்கிளி அபிநய சரஸ்வதி சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா என்று சொல்லி ஒருவரை ஏமாற்றுவார். இந்த படத்தில் அந்த கன்னடத்து பைங்கிளியுடன் கூடவே நடித்து இருக்கிறார். ஒருவேளை இது சூர்யாவுக்கு கனவுப் படமோ?
கொஞ்ச நாளைக்கு முன்னால் இதே மாதிரி தான் நடிகர் விக்ரமும் வித்தியாசமான ரோல்களாக தொடர்ந்து செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டார். அதுவே அவருக்கு பின்னால் வினையாக அமைந்துவிட்டது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவரால் தொடர்ந்து நிறைவேற்ற முடியவில்லை. அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜ் விக்ரமை பார்த்து எம்.ஜி.ஆரை. பாத்திருக்கேன் சிவாஜியை பாத்திருக்கேன் ரஜினிய பாத்திருக்கேன் கமலை பாத்திருக்கேன் ஆனா எல்லோரையும் ஒன்னா இப்போது தாம் பார்க்கிறேன் என்று வசனம் பேசி விக்ரமை புகழ்ந்து இருப்பார். அப்படியே விக்ரமுக்கு போர்வை போர்த்தி அமுக்கிவிட்டார்கள். இந்த படத்திலும் சூர்யாவை பார்த்து வடிவேல் அதே மாதிரி புகழ்ந்து ஒரு வசனம் பேசி இருக்கிறார். சூர்யா சூதுவாது தெரியாத பச்சை புள்ளை என்று அவர் தோன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்த நண்பர் தெரிவித்தார். சூர்யா இந்த மாதிரி தடைகளை எல்லாம் தாண்டி வருவாரா?

