கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு

Sunday, October 18, 2009

ஆதவன் - யூ டூ சூர்யா??

ஆதவன் படத்தை பார்த்து ஒருவர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்து இருப்பாரே ஆனால் அது நடிகர் விஜய்யாகத் தான் இருக்கும். போன வருடத்துக்கு முந்தைய வருடம் இதே மாதிரி தீபாவளிக்கு நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படம் வெளியானது. அதே தீபாவளிக்கு நடிகர் சூர்யா நடித்த வேல் படமும் வெளியானது. இரண்டு படங்களிலுமே நாயகர்களான விஜய்யும், சூர்யாவும் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தனர். அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பாத்திரமாகவும் மங்கி கேப் போட்டு மற்றொரு பாத்திரமாகவும் நடித்து இருந்தார். வேல் படத்தில் நடித்த சூர்யாவோ இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பி இருந்தார். இரட்டை வேடத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று விஜய்க்கே பாடம் எடுப்பது போல் இருந்தது வேல் படத்தில் சூர்யாவின் நடிப்பு. இத்தனைக்கும் விஜய் சூப்பர் ஹீரோவாக நிலைநாட்டிய பின் அவர் படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து இருந்தவர் நடிகர் சூர்யா

இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டும் தீபாவளிக்கு விஜய் நடித்த வேட்டைக்காரன் படமும் சூர்யா நடித்த ஆதவனும் வெளிவரும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. சூப்பர் ஸ்டார் நடித்த சந்திரமுகி படத்துடன் தில்லாக சச்சினை மோத விட்ட விஜய் அழகிய தமிழ் மகன் கொடுத்த பாடத்துக்கு பிறகு சூர்யாவின் ஆதவன் படத்துடன் மோதும் தில் இருந்திருந்தால் ஆச்சரியமே. ஏனோ காரணங்களால் வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளிவரவில்லை. ஒருவேளை வேட்டைக்காரன் வெளிவந்து இருந்தால் நான் கூட நிச்சயமாக ஆதவனை படத்துக்கு போகாமல் வேட்டைக்காரன் படத்தை தான் போய் பார்த்து இருப்பேன். விஜய்காக இல்லை, அனுஷ்காவுக்காக என்ன தான் சூர்யா படம் என்றாலும் ஹீரோயின் நயன்தாரா என்று தெரிந்ததுமே ஆதவன் படத்தை பார்க்கும் ஆர்வம் எனக்கு சுத்தமாக இல்லை. ஆனால் விதி வலியது

சூர்யாவின் ஆதவன் படத்துடன் எப்படி மோதுவது அப்படி மோதினால் கண்டிப்பாக படம் நன்றாக வரவேண்டும் என்ற கட்டாயம் விஜய்க்கு கண்டிப்பாக இருக்கும். ஆனால் இப்போது ஆதவன் படத்தை பார்த்துவிட்டு வேட்டைக்காரனை மோதவிடாமல் மிஸ் பண்ணிவிட்டோமே என்று விஜய் நினைத்து இருப்பார். விஜய் ஏற்கனவே நடித்து இதே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய மின்சாரக் கண்ணா படம் மாதிரி தான் இருக்கிறது ஆதவன் படமும். மின்சாரக் கண்ணா படத்தில் விஜய் காமெடி ஹீரோவாக செய்தது போல் தான் சூர்யாவும் செய்து இருக்கிறார். இதே படத்தை மட்டும் நம்ம விஜய் பண்ணி இருந்தால் நம் இணைய கண்மனிகள் படத்தை பிரித்து மேய்ந்து இருப்பார்கள் சூர்யா மேல் கொஞ்சம் நம்பிக்கை இருப்பதால் நம் ரசிகர்கள் பொறுமை காக்கிறார்கள். இந்த பொறுமையை சூர்யா தொடர்ந்து சோதிக்காமல் இருக்க வேண்டும்

வாரணம் ஆயிரம் படத்தில் மகனாகவும் தந்தையாகவும் சூர்யா முதியவர் வேடத்தில் புகுந்து விளையாடி இருப்பார். இந்த படத்தில் பத்து வயது சூர்யா வருகிறார் ஆனால் அதில் நம்ம சூர்யா நடிக்கவில்லை. அதற்கு பதிலாக மார்ஃபிங் பண்ணி இருக்கிறார்கள் இதை எல்லாம் இந்தியன் படத்திலேயே நாம பாத்தாச்சு. பிதாமகன் படத்தில் ஓடும் ரயிலில் சூர்யா ஏலம் விட்டு பொருட்களை விற்கும் போது கம்பெனிக்கு கட்டுப்படி ஆகவில்லை என்று கன்னட பைங்கிளி அபிநய சரஸ்வதி சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா என்று சொல்லி ஒருவரை ஏமாற்றுவார். இந்த படத்தில் அந்த கன்னடத்து பைங்கிளியுடன் கூடவே நடித்து இருக்கிறார். ஒருவேளை இது சூர்யாவுக்கு கனவுப் படமோ?

கொஞ்ச நாளைக்கு முன்னால் இதே மாதிரி தான் நடிகர் விக்ரமும் வித்தியாசமான ரோல்களாக தொடர்ந்து செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டார். அதுவே அவருக்கு பின்னால் வினையாக அமைந்துவிட்டது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவரால் தொடர்ந்து நிறைவேற்ற முடியவில்லை. அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜ் விக்ரமை பார்த்து எம்.ஜி.ஆரை. பாத்திருக்கேன் சிவாஜியை பாத்திருக்கேன் ரஜினிய பாத்திருக்கேன் கமலை பாத்திருக்கேன் ஆனா எல்லோரையும் ஒன்னா இப்போது தாம் பார்க்கிறேன் என்று வசனம் பேசி விக்ரமை புகழ்ந்து இருப்பார். அப்படியே விக்ரமுக்கு போர்வை போர்த்தி அமுக்கிவிட்டார்கள். இந்த படத்திலும் சூர்யாவை பார்த்து வடிவேல் அதே மாதிரி புகழ்ந்து ஒரு வசனம் பேசி இருக்கிறார். சூர்யா சூதுவாது தெரியாத பச்சை புள்ளை என்று அவர் தோன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்த நண்பர் தெரிவித்தார். சூர்யா இந்த மாதிரி தடைகளை எல்லாம் தாண்டி வருவாரா?

Sunday, September 27, 2009

மனைவி விஜய் ரசிகையாக அமைந்துவிட்டால்

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள் அப்படி நமக்கு வரம் கொடுக்க நினைக்கும் இறைவன் நமக்கு தரும் மனைவி விஜய் ரசிகையாக அமைந்துவிட்டால் அது வரமா என்று தெரியவில்லை. பார்த்திபன் கனவு படத்தில் புதிதாக திருமணமான ஸ்ரீகாந்த் தன் மனைவி சிநேகாவிடம் பிடித்த படம் பற்றி கேட்டவுடன் சிநேகா தனக்கு பாக்யராஜ் படம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று சொல்ல கேட்ட ஸ்ரீகாந்த் டரியலாகி போவாரே அப்படி தான் நானும் திருமணம் ஆன புதிதில் என் மனைவி விஜய் ரசிகை என்று அறிந்து டரியலாகிவிட்டேன்.

நான் திருமணத்துக்கு முன் பார்த்த ஒரே விஜய் படம் என்றால் அது காதலுக்கு மரியாதை தான் அதுவுமே கூட தியேட்டருக்கு சென்று பார்க்கவில்லை சன் டிவியில் இந்த வாரம் காதல் வாரம் என்று ஒரு வாரம் முழுவதும் இரவு பத்து மணிக்கு காதல் படங்களாக போட்டு காட்டிய போது தான் அந்த படத்தையும் கூட பார்த்தேன். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது எனக்கும் விஜய் படங்களுக்கும் எவ்வளவு தூரம் என்று இதற்கு மேலும் சொல்ல தேவை இல்லை.

விஜய் படம் என்றாலே அலறி அடித்து ஓடும் நான் சிவகாசி படம் ரிலீசான முதல் சில நாட்களிலேயே அந்த படத்தை போய் பார்த்தேன் என்றால் இறைவன் எனக்கு எத்தகைய வரம் அருளி இருக்க வேண்டும் என்று எண்ணி என்னை நானே தேற்றிக் கொண்டேன். இந்த மாதிரி சோதனையான சமயங்களில் எல்லாம் எனக்கு ஆறுதலாக அமைவது அக்கம்பக்கத்து நண்பர்கள் தான். நான் என்ன தான் மசாலா படங்களை விரும்பி பார்ப்பதில்லை என்றாலும் தமிழ் சினிமா ரசிகன் தான். தமிழ் சினிமா தவிர்த்து அவ்வப்போது பிறமொழி படங்களையும் பார்ப்பதுண்டு. ஆனால் சில நண்பர்களோ நான் தமிழ் படம் பார்த்தேன் என்று சொன்னாலே என்னை ஏதோ வேற்று கிரகவாசி மாதிரி பார்ப்பார்கள். அவர்கள் எல்லாம் எப்போது டென்சல் வாஷிங்க்டன், பென் அஃப்லெக் என்று ஏதேதோ ஆங்கில பெயர்களை சொல்வார்கள். எப்ப்போதும் அவர்கள் நடித்த படங்களையே பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் கடவுள் மனைவியை விஜய் ரசிகையாகவே கொடுத்து வரம் அருளி இருக்கிறார் என்று நினைக்கும் போது மிகவும் ஆறுதலாக இருக்கும்

தங்கமணியுடன் சேர்ந்து நான் விஜய் படங்களை பார்ப்பது போலவே அவரும் என்னுடன் சேர்ந்து சில படங்களை பார்ப்பார். அப்படி rang de basanti, a wednesday, taare zameen par, lagaan போன்ற படங்களை பார்த்த போது தங்கமணியும் என்னுடன் சேர்ந்து பார்த்தார். அதிலும் குறிப்பாக a wednesday பார்த்த போது மிகவும் வியப்படைந்து நம்ம ஆட்கள் எப்படியும் கூட படம் எடுக்கிறார்களா என்று மிகவும் ஆச்சரியம் அடைந்து போனார்.

விஜய்யின் வில்லு பட வெளிவந்த போது நடந்த பிரெஸ் மீட்டில் விஜய் தன் ரசிகர்களை பார்த்து சைலெண்ஸ் என்று சவுண்டுவிட்டதை பார்த்து தங்கமணியிடம் இருந்த விஜய் இமேஜ் ஏற்கனவே சிதறிப் போய் இருந்தது. இப்படி கால ஓட்டத்தில் வீட்டில் அடிக்கடி கேட்கும் விஜய் புராணம் கொஞ்சம் குறைந்தது. வில்லு படம் பார்க்கலாமா அல்லது அபியும் நானும் பார்க்கலாமா என்ற நிலை வந்த போது நான் பார்க்க விரும்பிய அபியும் நானும் படமே பார்க்கலாம் என்று தங்கமணி ஒத்துக் கொண்ட போது என்னுடைய பொறுமை எனக்கு கொடுத்த பக்குவத்தை எண்ணி நானே என்னை மெச்சிக் கொண்டேன்

அப்பாடா இனி விஜய் என்னும் டெரரில் இருந்து தப்பித்துவிடலாம் என்று எண்ணிய போது மீண்டும் வந்தது சோதனை. தங்கமணியை தான் சமாளித்தாகிவிட்டதே என்று நினைத்து கொண்டிருந்த போது மீண்டும் ஒரு நாள் விஜய் படம் ஓடிக் கொண்டு இருந்தது இப்போது படத்தை ரசித்துக் கொண்டு இருந்தது தங்கமணி அல்ல எங்கள் அருமை புதல்வி. ஆகா குழந்தைகளை கூட நம்ம விஜய் கவர்ந்துவிடுகிறாரே அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததில் தப்பே இல்லை என்ற உண்மை என் மரமண்டைக்கு அப்போது தான் உரைத்தது

Tuesday, September 22, 2009

கமலின் அறச்சீற்றம் - 2

முந்தைய இடுகையை வாசிக்காதவர்களுக்கு கமலின் அறச்சீற்றம் - 1

இதை சில பகுதிகளாக எழுதலாம் என்று தான் ஆரம்பித்தேன் ஆனால் உன்னைப்போல் ஒருவன் படத்தை வைத்து வலைத்தளங்களில் நடக்கும் மோதல்கள் வெறும் கருத்து மோதல்களையும் தாண்டிச் செல்வதால் இந்த இடுகையோடு முடித்துக் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன்

முதலில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். பொதுவாக கமலின் படங்கள் வெளிவரும் போதெல்லாம் இந்துத்வ தரப்பிலிருந்து தான் எதிர்ப்பு கிளம்பும். தசாவதாரம் படம் வெளிவரும் முன் தியேட்டர்களில் காட்டப்பட்ட ட்ரெய்லர்களில் சாமி சிலையை ஒருவர் காலால் உதைப்பது போன்ற காட்சியை பார்த்துவிட்டு முதலில் அந்த படத்துக்கு தடை கோரி நீதிமன்றம் சென்றது ஏதோ ஒரு இந்து அமைப்புதான். ஆனால் அந்த படத்தில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை என்று சொல்லி ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. மறந்து போய்விட்ட சைவம் - வைணவ பிரச்சினையை மீண்டும் ஊதி ஆதாயம் தேட முயல்கிறார் கமல் என்று இந்து அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்தன. தசாவதாரம் பெற்ற பெரு வெற்றியை தொடர்ந்து அந்த எதிர்ப்புகள் எல்லாம் கரைந்து போயின. தசாவதாரம் படம் பார்த்துவிட்டு அது மாதிரி சைவ - வைணவ மோதல்கள் எங்கு நடந்தனவா என்று தெரியவில்லை. இது மாதிரி கமலின் முந்தைய படங்களுக்கும் இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்புகள் வந்து இருக்கின்றன

உன்னைப்போல் ஒருவன் படத்தின் ஒரிஜினலான A Wendesday படத்தில் நான்கு தீவிரவாதிகளையுமே முஸ்லிம்களாக காட்டி இருப்பார்கள். அதை தமிழில் கமல் மூன்று முஸ்லிம்களையும் ஒரு இந்து என்றும் மாற்றி இருக்கிறார். "கான்"கள் ஆதிக்கம் செய்யும் இந்தி சினிமாவிலேயே செய்ய துணியாததை தமிழில் கமல் செய்து காட்டி இருக்கிறார். A Wendesday படத்தில் மாலேகான் குண்டுவெடுப்பு பற்றியும் குறிப்பிடப்படும் ஆனால் அந்த படம் வந்த போது மாலேகானில் குண்டு வைத்தது இந்துக்கள் தான் என்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இருந்தாலும் பெஸ்ட் பேக்கரி, மோதி பெயரை எல்லாம் அப்படியே நிஜத்தில் உள்ள பெயர்களை கமல் குறிப்பிட்டது மாதிரி வேறு யாரும் இதுவரைக்கும் செய்தார்களா என்று தெரியவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்லி வம்பு வளர்க்கும் இந்துத்வா கூட்டம் மாலேகான் குண்டுவெடிப்பில் இந்து சாமியாரிணி கைதான போது இந்து தீவிரவாதி என்று யாரும் கிடையாது என்று பசப்பியது. ஆனால் கமலோ அதற்கும் மேலே சென்று ஒரு இந்துவை தீவிரவாதியாக தன் படத்தில் சித்தரித்து இருக்கிறார். இங்கே கமலை மணிரத்னம் உடன் ஒப்பிட்டு பார்க்கலாம். பம்பாய் படம் எடுத்த மணிரத்னம் பிரச்சினை வரும் என்று எண்ணி பால் தாக்கரேவுக்கு ஸ்பெஷல் ஷோ போட்டு காட்டி அவர் சொன்ன இந்துவத்தின் கோர முகம் தெரியும் காட்சிகளை எல்லாம் நீக்கினாராம். அதே மாதிரி மணிரத்னம் எந்த முஸ்லிம் தலைவருக்கும் போட்டு காட்டவில்லை

இந்த படத்தில் நெருடலாக இருந்த ஒரு விஷயம் ஒரு தீவிரவாதி தன் மனைவியின் மறைவை பற்றி சொல்லும் போது மற்றொரு தீவிரவாதி அதை நையாண்டி செய்வது தான். இது மதம் என்ற எல்லையையும் தாண்டி மிகவும் மட்டரகமான நகைச்சுவை உணர்வையே காட்டுகிறது. மேலும் இந்த படத்தில் கமல் பாத்திரம் ஒரு முஸ்லிம் என்பதையும் ஏற்க முடியவில்லை. முதலில் இடது கையில் எழுதிவிட்டு பின்னர் காந்திஜியை உதாரணம் காட்டி தன்னால் இரண்டு கைகளாலும் எழுத முடியும் என்று சொன்னது போல் அவரால் அந்த பாத்திரம் முஸ்லிம் அல்ல என்பதையும் மிக எளிதாக சொல்ல முடியும். ஆனால் அப்படி எல்லாம் தெளிவாக எல்லாவற்றையும் சொல்வதற்கு அவர் ஒன்றும் சாதாரண ஆள் அல்ல கலைஞானியாயிற்றே

மற்றபடி படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் மோகன்லால் இந்த படத்தில் செய்த வேடம் அவருக்கு புதிதல்ல அவர் இதே மாதிரி பாத்திரத்தை Company என்ற இந்தி படத்தில் ஏற்கனவே செய்து இருக்கிறார். அவரின் மலையாளம் கலந்த உச்சரிப்பு எப்போதும் எனக்கு பிடித்ததில்லை ஆனால் இந்த படத்தில் IG பாத்திரத்துக்கு அந்த மலையாள வாசம் மிகவும் பொருந்தி இருக்கிறது. கமல் இந்த படத்தில் முதல்வரின் வீடு முதல்வரின் குரல் எல்லாம் காட்டி மிரட்டி இருக்கிறார். அரசியலுக்கு வருவேன் என்று பூச்சாண்டி காட்டும் நடிகர்களுக்கு நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். பூச்சாண்டி காட்டும் நடிகரை நையாண்டியும் செய்கிறார். ஸ்ரீமன் பல படங்களில் அந்த நடிகருக்கு நண்பராக வருவார் இந்த படத்தில் அவரையே வாருகிறார்

படத்தில் கமலின் வாட்ச், செருப்பு, சாண்ட்விச் பற்றி எல்லாம் கமெண்டு சொல்பவர்களால் எப்படி மற்ற தமிழ் சினிமா படங்களை பார்க்க முடிகிறது என்பது பெரும் புரியாத புதிராக இருக்கிறது

Monday, September 21, 2009

கமலின் அறச்சீற்றம் - 1

முன்னே எல்லாம் கமல் படம் பார்த்தால் தான் குழப்பம் வரும் இப்போது கமல் படம் குறித்த விமர்சங்களை பார்த்தாலே குழப்பம் வரும் போல் இருக்கிறது. முந்தைய சூப்பர் ஹிட் படமான தசாவதாரத்தில் தான் ஒரு ஆத்திகரா நாத்திகரா என்று தீர்மானமாக சொல்லாமலேயே படத்தை முடித்து இருந்தார். இப்போது வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் உன்னைப்போல் ஒருவன் படத்தில் அதையே கொஞ்சம் மாற்றி படத்தின் முக்கிய பாத்திரம் எந்த மதம் என்று சொல்லாமலே இதையும் முடித்து இருக்கிறார். இன்னும் தசாவதாரம் ஆத்திகர் - நாத்திகர் விவாதமே இன்னும் முடிவடையாமல் இருக்கும் போது அடுத்த விவாதத்தை கிளப்பிவிட்டு போய் இருக்கிறார். இதையும் குரூப்பாக விவாதிபந்தற்கென்றே பலரும் இருப்பதால் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இது தான் ஓடிக் கொண்டு இருக்கும். இப்படி எல்லாம் ரசிகனின் நாடித்துடிப்பை துல்லியமாக கணக்கிட்டு தன் விரல் நுனியில் வைத்து இருப்பதால் தான் கலை உலகின் பொன்விழா கடந்து வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கிறார் நம்ம உலக நாயகன்

தசாவதார விவகாரம் எந்த அளவுக்கு சூடு பிடித்து ஈமெயில்களில் உலவி வந்தது என்பது நமக்கு தெரியும். அவர் ஸ்ரீனிவாச ராமானுஜராக வந்து ஆத்திகராக காட்டிய ஆக்ரோஷத்தை நாத்திகராக வந்த கோவிந்த காட்டவில்லை. கோவிந்த் பட்டும் படாமலும் தான் பேசுகிறார் அதனால் கமல் நிச்சயம் ஆத்திகர் தான். கமல் நடித்த 10 பாத்திரங்களில் ஒன்றே ஒன்றும் மட்டும் தான் நாத்திகம் பேசுகிறது மற்ற பாத்திரங்கள் எல்லாம் முஸ்லீம் பாத்திரம் உட்பட எல்லாம் கடவுள் நம்பிக்கை இருப்பதாகவே காட்டப்பட்டுள்ளது அதனால் அவர் ஆத்திகர் தான் என்று ஒருபுறமும். என்ன தான் இருந்தாலும் மெயின் பாத்திரமான கோவிந்த் பல இடங்களில் நாத்திக கருத்துகளையே பரப்புகிறது என்றும் விவாதம் சென்றது. இப்படி எல்லாம் ரசிக கண்மணிகள் இருக்க கமல் இரண்டு படம் என்ன இதே மாதிரி அவர் இன்னும் இருபது படங்கள் எடுக்கலாம் அப்போதும் கூட தசாவதார விவாதம் முடிவு பெற்று இருக்காது

உன்னைப்போல் ஒருவனின் ஒரிஜினல் கதையான A Wednesday படத்தை இந்தியல் பார்த்த போதே அது குறித்து ஏற்கனவே விமர்சனம் எழுதி இருந்தேன். தமிழ் சினிமாவில் பலரும் பிற மொழிகளில் வந்த படங்களை ரீமேக் செய்து தமிழில் வெளியிடுகிறார்கள். கமலும் அதே மாதிரி ரீமேக் செய்கிறார் ஆனால் அவருக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பது இந்த படத்தை பார்த்தாலே புரியும். பெரும்பாலும் ரீமேக் செய்பவர்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களை மட்டுமே ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். உன்னைப்போல் ஒருவனின் ஒரிஜினல் படமான A Wednesday வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம் அல்ல ஆனால் அது ஒரு தரமான படம் என்று அனைத்து தரப்பினராலும் பாராட்டப் பெற்றது. இந்தியில் படத்தை பார்த்தபோது இது மாதிரி படம் தமிழில் வருமா என்றே சந்தேகம் இருந்தது. இந்தியில் இந்த படம் வந்தபோது கூட அதில் நஸ்ருதீன் ஷா, அனுபம் கெர் போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் நடித்து இருந்தார்கள் அவர்கள் சிறந்த நடிகர்கள் என்று அறியப்பட்டாலும் அவர்களின் ரீச் மற்ற மாஸ் ஹீரோக்கள் அளவுக்கு கிடையாது. ஒருவேளை ஏதாவது ஒரு மாஸ் ஹீரோவையும் அதில் நடிக்க வைத்து இருந்தால் அந்த படமும் வணிக ரீதியாக வெற்றி பெறுவதோடு அல்லாமல் அதற்கு நல்ல ரீச்சும் கிடைத்து இருக்கும். தமிழில் அதை தானே தயாரித்து நடித்தன் மூலம் அந்த குறையை கமல் போக்கி இருக்கிறார்

சில நாட்களுக்கு முன் இந்தி நடிகர் ஷாரூக் கான் அமெரிக்கா சென்ற போது அவர் முஸ்லிம் என்பதால் அவரை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து வைத்து இருந்ததாக சொல்லி ஒரு பிரச்சினை கிளம்பியதே நினைவிருக்கிறதா. ஷாரூக் கானுக்கு ஏற்பட்டது போலவே நம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கும் சோதனை ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. இந்த இரண்டு சம்பவங்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே இதே மாதிரி சோதனை இந்தி நடிகர் அமீர் கானுக்கும் நம் உலகநாயகனுக்கும் நடந்தது எத்தனை பேருக்கு இன்னும் நினைவிருக்கிறது என்பது தெரியவில்லை. கமலுக்கும் அமீர்கானுக்கும் ஒரே மாதிரி சோதனைகள் நடைபெற்றது வியக்க வைக்கும் மற்றொரு ஒற்றுமை.

பஞ்சதந்திரம் படத்தில் பைலட்டாக கமல் தோன்றும் காட்சிகள் சில கனடாவில் எடுக்கப்பட்டது. அந்த படத்துகாக கமல் ஒரு குறுந்தாடி வேறு வைத்து இருந்தார். இது போதாதா ஒருவரை தடுத்து வைப்பதற்கு. அவர் பெயரோ கமல் Hassan, சிறியதாக தாடி வேறு வைத்து இருக்கிறார் இந்த இரண்டு காரணங்களையும் வைத்து அவரும் ஒரு முஸ்லிம் என்று நினைத்துக் கொண்டு அவரை தடுத்து வைத்து வறுத்து எடுத்துவிட்டார்கள் கனடா நாட்டு அதிகாரிகள் அமெரிக்க வந்த போதும் இந்த பிரச்சினைகள் தொடர்ந்ததாக் அவர் தெரிவித்தார். தனக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவத்தை கமலே தன் குரலில் நளதமயந்தி படத்தில் வரும் ஒரு பாடலில் விவரித்து இருப்பார் டைம் இருந்தால் அந்த பாடலை கேட்டுப் பாருங்கள்

இந்த இடுகை உன்னைப்போல் ஒருவன் படம் பற்றியது தானா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். படத்தை பற்றி சொல்லாமல் ஏதேதோ சொல்வதாக நீங்கள் நினைக்கலாம், ஒரு படத்தை பார்த்து அதற்கு ஒரு விமர்சனம் எழுதுவது தான் எல்லா படத்துக்கும் செய்வது தானே நம்ம உலகநாயகன் படம் என்றால் கொஞ்சம் பில்டப் வேண்டாமா அதான். இந்த இடுகை கொஞ்சம் நீண்டுவிட்டது அதனால் மீண்டும் அடுத்த இடுகையில் தொடரலாம் அதுவரைக்கும் உங்களுக்கும் போர் அடிக்காமல் இருக்க வேண்டும் அல்லவா அதனால் நம்ம உலக நாயகனுக்கு கனடாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நீங்கள் மறந்துவிட்டிருந்தால் இதை கொஞ்சம் படியுங்கோ மக்களே கமலுக்கு வந்த சோதனை

Monday, September 14, 2009

(கலைப்) பொக்கிஷம் - சேரன் அடித்த சிக்ஸர்

நாம் பள்ளி பருவத்தில் பாட புத்தகத்தில் அதுவும் ஆங்கில பாட புத்தகத்தில் ஒரு பாடமாக பண்டித ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா அம்மையாருக்கு எழுதிய கடிதங்கள் பாடமாக இருந்த நினைவு உங்களுக்கும் இருக்கும். அப்போது என் மனதில் ஒரு கேள்வி. நேரு தன் மகளுக்கு கடிதம் எழுதுவது என்பது ஒருவரின் சொந்த விஷயம் அதை ஏன் நமக்கு பாடமாக வைக்க வேண்டும் என்று அப்போது எழுந்தது. பின்னர் ஓரளவு மனம் முதிர்ச்சி அடைந்த போது அதற்கான விடை கிடைத்தது. இப்போது போல் அப்போது இணையம், டிவிட்டர், எஸ்.எம்.எஸ். எல்லாம் கிடையாததால் பெரும்பாலும் கருத்து பரிமாற்றதலுக்கு கடிதங்களே பெரும் பங்காற்றி இருக்கின்றன. கருத்து பரிமாற்றுதலில் முக்கிய பங்கு வகித்ததால் கடிதம் எழுதுவது என்பது நாள்டைவில் ஒரு கலையாகவே மாறிவிட்டது. அதுவும் சிறப்பாக கடிதம் எழுதுவது என்பது இலக்கியத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. இன்னும் சொல்லப் போனால் எப்போது ஒருவர் பேனா எடுத்து ஒரு கடிதம் தீட்டிவிட்டாரோ அப்போதே இலக்கியவாதி ஆவதற்கான முதல் படியை அவர் எடுத்துவைத்துவிட்டார் என்றே சொல்லலாம்

இப்போது கூட இணையத்தில் எழுதும் இலக்கியவாதிகள் அவ்வப்போது தங்களுக்கு வாசகர்கள் எழுதும் கடிதங்களை தவறாமல் பிரசிரித்து வருகிறார்கள். பத்திரிக்கைகளுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தவர்கள் பின்னாளில் இலக்கியவாதிகளாக மிளிர்ந்து இருக்கிறார்கள். இப்படி கடிதம் எழுதுவது இலக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனாலேயே நேரு போன்ற பெரும் தலைவர்கள் எழுதிய கடிதங்களை பாடமாக வைத்து இருக்கிறார்கள் என்று பின்னாளில் தெளிவு ஏற்பட்டது. இப்படி கடிதங்களை பாடமாக வைக்கும் போது அதே கடிதங்களை படமாக எடுத்தால் அதன் வடிவம் கவித்துவமாக தானே இருக்கும். அப்படி தான் இருக்கிறது சேரனின் பொக்கிஷம். அந்த வகையில் இந்த படம் ஒரு கலைப்பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இப்படி ஒரு கதைக் களத்தை தேர்ந்தெடுத்ததன் மூலம் சேரன் மீண்டும் ஒருமுறை செஞ்சுர் அடித்து இருக்கிறார்

இந்த படம் வேறு ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள். அது குறித்து அதிகமாக தெரியவில்லை. அதானல் படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் குறையவில்லை. படம் ஒரு டிபிக்கலான சேரனின் படம். மென்மையான காதலை சொல்லும் படம். இந்த படம் ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டு வந்ததால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் ஓரளவு ஈடு செய்தது என்றே சொல்லலாம். ஆனால் படம் முடிவடையும் கட்டத்தில் கொஞ்சம் சொதப்பலாகவே இருந்தது. படம் முடியும் முன் ஒரு அரை மணி நேரத்துக்கு முன் எழுந்துவந்துவிட்டால் இந்த ஏமாற்றத்தை தவிர்க்கலாம்

படத்தில் சேரனின் பெயர் லெனின், மிகவும் பரிச்யமான பெயராக தெரிகிறது. லெனின் என்று பெயர் வைத்துவிட்டதால் கல்கத்தாவுக்கு கப்பல் ஏறிவிட்டாரா சேரன் என்று தெரியவில்லை. அதே போல் நாயகனும், நாயகியும் வேற்று மதத்துகாரர்கள் என்று காட்டி மதத்தை இங்கே நுழைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இருந்தாலும் முஸ்லீம் பெண் பாத்திரத்தில் பத்மப்ரியா கனகச்சிதமாகவே பொருந்துகிறார். ஆனால் அவருடைய கெட்டப் அடிக்கடி நாம் பார்ப்பது தமிழ்ப் படமா அல்லது ஈரானிய படமா என்ற சந்தேகத்தை வரவழைக்கிறது

திருமணத்துக்கு நாயகியின் தந்தை சம்மதம் அளித்துவிட்டு பின் குடும்பத்தோடு மாயமாகிவிடுவதை அறிந்து சேரன் அழுது புலம்பி கடற்கரையோரம் ஒதுங்கி இருக்கும் கட்டுமரத்தி கண்ணயர்வது போல் காட்டி இருப்பது அப்படியே ஆட்டோகிராப்பை நினைவுபடுத்துகிறது. பாடல்களில் ஒன்றிரண்டு மிகவும் இனிமையாக இருக்கிறது. அதிலும் சேரன் பேரூந்தில் பயணம் செய்யும் போது வரும் பாடல் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பேரூந்து நிலையத்தில் கிளம்புவதற்கு முன் காலியாக இருக்கும் பேரூந்துகளில் மாறி மாறி காதலியுடன் பேசுவது என்று யதார்த்தமாக படத்தை நகர்த்தி இருக்கிறார். அதற்கு திருஷ்டி வைத்தாற் போல் கிளைமேக்ஸில் அப்பட்டமாக யதார்த்தத்தை மீறி இருக்கிறார். மாயக்கண்ணாடியில் சினிமா நட்சத்திரமாக ஆசைப்பட்டு பல சினிமா நட்சத்திரங்களாக நடித்து பேசி காட்டுவாரே அதே மாதிரி இந்த படத்தில் பல இடங்களில் செய்ற்கையாக நடித்து இருக்கிறார்

சேரன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். அவர் ஒரே மாதிரியான ஸ்டீரியோ டைப் படங்களை விட்டு வெளிவந்து பல தரப்பட்ட படங்களை தர முயற்சிக்க வேண்டும். சேரனின் படங்களை ஆட்டோகிராப்புக்கு முன் ஆட்டோகிரப்புக்கு பின் என்று பிரித்தால் ஆட்டோகிராப்புக்கு பின் வந்த படங்கள் எல்லாம் ஸ்டீரியோடைப்பாகவே இருக்கின்றன. அவர் எவ்வளவு தான் இந்த படங்களை வித்தியாசமாக காட்டுவதற்கு முயற்சி செய்தாலும் அதற்கு அவர் மிகவும் கஷ்டப்படுவது பல இடங்களில் நன்றாக தெரிகிறது

Tuesday, September 08, 2009

இயக்குநர் ஷங்கருக்கு பிடித்த பத்து டெக்னீஷியன்கள்



நாங்க எல்லா பதிவுக்கும் கமல் படம் போடுவோம்ல

  1. பிடித்த ஹீரோ - அர்ஜீன் மற்றும் ரஜினி
  2. பிடித்த ஹீரோயின் - ஐஸ்வர்யா பச்சன். ஷங்கர், ரஜினி இருவரின் மகள்கள் பெயருமே ஐஸ்வர்யா தான் என்பது கூடுதல் தகவல்
  3. பிடித்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்
  4. பிடித்த கதாசிரியர் - சுஜாதா
  5. பிடித்த நடன இயக்குநர் - ராஜூ சுந்தரம்
  6. பிடித்த காமெடியன் - விவேக்
  7. பிடித்த கலை இயக்குநர் - தோட்டாதரணி
  8. பிடித்த ஒளிப்பதிவாளர் - கே.வி.ஆனந்த்
  9. பிடித்த ஸ்டண்ட் இயக்குநர் - பீட்டர் ஹெய்ன்
  10. பிடித்த தயாரிப்பாளர் - இதை யார் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஜென்டில்மேன் படம் தொடங்கி ஷங்கர் இயக்கிய எல்லாமே பிரம்மாண்ட படங்கள் தான் அதை வைத்து நீங்களே யூகித்து கொள்ளுங்கள்

Friday, September 04, 2009

கந்தசாமி குழந்தைகளுக்கான படமா?

எஸ்.ஜே.சூர்யா என்று ஒருவர் இருந்தாரே நினைவிருக்கிறதா. அவர் எடுத்த நியூ படம் மலையாளத்தில் ஷகீலா படங்கள் செய்த புரட்சியை தமிழில் செய்யக் கூடியதாக இருந்தது. நியூ படம் பெற்ற வெற்றியை பார்த்த பலர் மலையாளத்தில் ஷகீலா ஏற்படுத்திய பூகம்பத்தை இந்த எஸ்.ஜே.சூர்யா தமிழில் செய்துவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக அவரை ஆரம்பத்திலேயே அமுக்கி போட வேண்டும் என்று முடிவு செய்தனர். பல மாதர் அமைப்புகள் அந்த படத்தின் மீது வழக்கு போட்டு அந்த படத்தை தடை செய்துவிட்டனர். பின்னர் அந்த படம் என்ன ஆனது என்று நினைவில்லை. அதற்கு பிறகும் அடங்காமல் எஸ்.ஜே.சூர்யா கொடுத்த அரிய படைப்பு தான் அ.ஆ அதாவது அன்பே ஆருயிரேவாம். அ.ஆ என்பது அரிச்சுவடியை ஆரம்பத்தில் கையில் எடுக்கும் குழந்தைகள் சொல்வது. ஆனால் இந்த எஸ்.ஜே.சூர்யா சொல்லிக் கொடுக்க நினைத்தது பாலர்களுக்கு அல்ல அவர் சொல்லி கொடுக்க நினைத்தது பாலியல் விஷயம்.

அந்த படத்துக்கு அவர் முதலில் வைத்த பெர்ய பி.எஃப். அதாவது பெஸ்ட் ஃபிரெண்டாம். பி.எஃப் என்றால் என்னவென்று உலகுக்கே தெரியும். விஷயம் விபரீதமாவதை உணர்ந்த நம்மவர்கள் அந்த படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். படம் தலைப்பு தமிழில் இல்லை ஆங்கிலத்தில் இருக்கிறது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆங்கிலத்தில் இருக்கிறது என்று தான் எதிர்ப்பு தெரிவித்தார்களே தவிர ஆபாசமாக இருக்கிறது என்று யாரும் எதிர்ப்பு தெரிவித்ததாக நினைவில்லை. அந்த படம் நல்ல வேளையாக ஊற்றிக் கொண்டுவிட்டது. அப்படி இல்லாமல் அதுவும் நியூ படம் மாதிரி வெற்றி பெற்று இருந்தால் இன்று அவர் தமிழ் சினிமாவில் பெரிய புரட்சியே பண்ணி இருப்பார். ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து அதே ஃபார்முலாவை காப்பி பண்ணும் தமிழ் இயக்குநர்களும் அதே மாதிரி படங்களை கொடுத்து தமிழ் சினிமா என்றாலே போர்னோ என்று ஆகியிருக்கும் நல்லவேளை அப்படி எதுவும் ஆகவில்லை

முடிந்த போன் விஷயத்து எதற்கு இவ்வளவு பில்டப் என்று கேட்கிறீர்களா. மேலே சொன்ன விஷயங்களை வைத்து அ.ஆ படம் எத்தகையது என்று தெரிந்து இருக்கும். ஆனால் அந்த படம் வந்த போது எஸ்.ஜே.சூர்யா தொலைக்காட்சியில் வந்து அந்த படம் குழந்தைகளுக்கான படம் என்றும் குழந்தைகள் அந்த படத்தை விரும்பி பார்ப்பார்கள் என்றும் சொன்னார். அதற்கான காரணங்களாக படத்தில் இடம் பெற்று இருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளை மிகவும் கவரும் என்று சொன்னார். அதை நம்பி போய் பார்த்தேன். படம் எப்படி இருந்தது என்று உங்களுக்கே தெரியும்.

தொலைக்காட்சி நமக்கு தரும் தொல்லைகளில் மெகா சீரியல்களுக்கு அடுத்து முக்கிய இடம் பெறுவது இந்த மாதிரி சினிமா சம்மந்தமான ப்ரமோக்கள் தான். வில்லு படம் தமிழில் வெளிவரும் முதல் ஜேம்ஸ்பாண்டு படம் என்று டாக்டர் விஜய்யும் பிரபுதேவாவும் சேர்ந்து தொலைக்காட்சியில் ஜல்லி அடித்த கொடுமையை எங்கு போய் சொல்வது. அதைவிட கொடுமை நாக்கமூக்க பாடலுக்கு கொடுத்த பில்டப். நாக்கமூக்க என்றால் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்று ஆரம்பித்து அதை கிட்டத்தட்ட ஒரு இலக்கிய ஆராய்ச்சி மாதிரி பேசிக் கொண்டார்கள்

இப்போது விக்ரமும் தன் பங்குக்கு கந்தசாமி படம் குழந்தைகளுக்கான படம் என்று அள்ளிவிட்டு இருக்கிறார். அவர் எதை வைத்து அப்படி சொன்னார் என்று தான் இன்னும் புரியவில்லை. சரி அவர் நடித்த படம் அப்படி தான் பேசுவார். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா. தாணு என்னடாவென்றால் கந்தசாமியை பற்றி தவறாக எழுதுபவர்கள் மன்நோயாளிகள் என்று சொல்லி இருக்கிறார். அய்யா ஐம்பது கோடி போட்டு படம் எடுக்கிறீர்கள் அப்படி எடுக்கும் போது ஏற்கனவே பார்த்த படத்தை திரும்பவும் காட்டுகிறீர்களே புதுசாக ஏதாவது காட்டுங்கள் என்று கேட்பது ஒரு தவறா. அந்நியன் படத்தில் விக்ரம் பிரேக் கேபிள் தயாரிப்பாளரை பார்த்து "குடுத்த காசுக்கு ஏன்டா தரமான பொருளா தயாரிக்க மாட்டேன்றீங்க" என்று கேட்பார். அது மாதிரி தானே இதுவும்

அந்நியன் படத்தில் நடித்த பின் விக்ரம் ஒரு பேட்டியில் தான் இப்போதெல்லாம் சாலையில் சிக்னல் விழுந்துவிட்டால் பொறுமையாக் நின்று செல்வதாக குறிப்பிட்டு இருந்தார். அதே மாதிரி தான் ஒரு நிலம் பதிவு பண்ணும் போது பெரிய நடிகர் என்று பந்தா ஏதும் பண்ணாமல் சமர்த்தாக சாதாரண மக்களுடன் சேர்ந்து பல மணி நேரம் காத்து இருந்து பதிவு செய்ததாகவும் செய்தி வந்தது. விக்ரமுக்குள் அந்நியன் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கான அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களும் அதே பாதிப்புடன் வருவது தான் கொஞ்சம் ஓவர்.

கந்தசாமி படம் பார்க்க வருபவர்களுக்கு எல்லாம் சேவல் மாஸ்க் இலவசமாக கொடுக்கிறார்களாம். இப்படி படம் பார்க்க வருபவர்களுக்கெல்லாம் கணக்கில்லாமல் மாஸ்க் வாரி வழங்குபவர்கள் படத்தில் நடித்த ஸ்ரேயாவுக்கு ஒரே ஒரு மாஸ்க் கொடுத்து இருக்கலாம்

நண்பர்கள்

Blog Archive